Uncategorized

எங்கு படிக்கலாம்- தொடர்ச்சி….

மத்திய கல்வி வாரியத்தின்கீழ் படித்த 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ மாணவியரின் பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள் சமீபத்தில் ஒரே நாளில் வெளியிடப்பட்டன. முன்னதாக, தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் பயின்ற 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மத்திய கல்வி வாரியத்தின் தேர்வு முடிவுகள் மிகக்குறைந்த கால இடைவெளியில் வெளியிடப்பட்டது இதுவே முதல்முறை. 

தமிழக கல்லூரிகளில் பல படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களும் (Self Financing Colleges), தனியார் பல்கலைக்கழகங்களும் (Private Universities), நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் (Deemed Universities) சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தத் துவங்கிவிட்டன.

இந்நிலையில், இருவேறு பாடத்திட்டத்தின்கீழ் பயின்ற மாணவர்களுக்கு இடையில் இடச்சேர்க்கை பெறுவதற்கான போட்டி நிலவுவதை காணமுடிகிறது. குறிப்பாக, கலை, அறிவியல், வணிகம், பொருளாதாரம், பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு  அதிகமான போட்டி நிலவுகிறது. 

தமிழகத்தில் இதுவரையிலும், கலை அறிவியல் படிப்புகள் (Arts and Science), பொறியியல் (Engineering) படிப்புகள், வேளாண் (Agriculture) படிப்புகள், மீன்வளப்படிப்புகள் (Fisheries), விளையாட்டுத்துறை (Sports and Physical Education) சார்ந்த படிப்புகள் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆர்வத்துடன் மேற்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். 

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, உயிரியல் (அ) தாவரவியல், விலங்கியல் பாடங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள பல படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படும்.   

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடச்சேர்க்கைக்கான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகள் பல நடைபெற்று முடிந்துள்ளன. பல தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் பல நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துள்ளன. அடுத்த கட்டங்களுக்கான கலந்தாய்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  

அகில இந்திய அளவில், முன்னணி கல்வி நிறுவனங்கள் என அடையாளப்படுத்தப்படும் கல்வி நிறுவனங்களிலும் கலந்தாய்வுகள் நடைபெற்று வருகின்றன. 

பல நூற்றுக்கணக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மாணவர்கள் முன்னால் இருப்பினும், ஏதேனும் ஒரு படிப்பில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை பெற முடியும் என்பதால், இயல்பாகவே கடுமையான போட்டி சூழல் உருவாகி விடுகிறது.

பெருநகரங்களில் வசிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு சவால்விடும் விதமாக, தமிழகம் முழுவதிலும் இருந்து பெருநகர கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கிற மாணவ மாணவியரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால், பெருநகர மாணவ மாணவியருக்கு அவர்கள் விரும்புகிற பெருநகர கல்லூரிகளிலும், பாடப்பிரிவுகளிலும் இடம் கிடைப்பதில்லை. இத்தகைய மாணவ மாணவியர் வேறு நகரங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்க விரும்புவதில்லை. ஆக, ஏதேனும் ஒரு கல்லூரியில், கிடைக்கிற படிப்புகளில் சேர்க்கை பெறவேண்டிய நிலை இருக்கிறது. 

பெருநகர மாணவ மாணவியர், உயர்கல்வியில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிற இத்தகைய போட்டியை உணர்ந்து படித்தால் மட்டுமே பெருநகர கல்லூரிகளில் அவர்களுக்கான இடச்சேர்க்கையை பெற இயலும்.  

 

– விழிப்புணர்வூட்டுவோம்…

 

S.சித்தார்த்தா, 

வழிகாட்டி – உயர்கல்வி ஆலோசகர்,

(Mentor-Career Guidance), 

Galaxy Edu Services,

Contact: 94451 06661 

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *