
இந்திய தேசம் உலகின் மிகத்தொன்மையான பல்கலைக்கழகங்களை கொண்டிருந்தது. அந்த வகையில் நமது தேசத்தை, உலகத்தின் அறிவுப் புதையல் என பெருமையாகவே கூறலாம். சமகால இந்தியர்கள் பெரும்பாலான பன்னாட்டு தொழில் நிறுவங்களின் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றனர். இந்தளவிற்கான முக்கியத்துவம் நம் தேசத்தின் கல்வி அமைப்பால் கட்டமைக்கப்பட்டது என்றால் அஃது மிகையில்லை.
பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் விரும்பி வந்து கல்வி கற்கும் தேசமாக இந்திய தேசம் விளங்குகிறது. ஏனெனில், இன்றைய காலக்கட்டத்திற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் ஏற்ப பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. உலகளாவிய வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கைகளும், படிப்புகளின் வகைகளும் ஒவ்வொரு ஆண்டும் பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் இந்தியா முழுமைக்கும் 1040-க்கும் அதிகமான பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக UGC எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவை மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள் (Central Universities), மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்கள் (State Universities), தனியார் பல்கலைக்கழகங்கள் (Private Universities), நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் (Deemed Universities) என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான ஆர்வம் மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதை காணமுடிகிறது. இத்தகைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எழுதி தேர்ச்சி பெற வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய தேர்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதே மாணவர்களின் ஆர்வத்திற்கான மிகச்சரியான சான்று.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பல தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகள் (Eligibility cum Entrance Tests) மத்திய அரசின் பல்வேறு கல்வி அமைப்புகள் மூலம் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தன. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தி வந்ததை உணர்ந்த மத்திய அரசு, 2018 ஆம் ஆண்டில், NTA என்கிற தேசியத் தேர்வு முகமை அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பின் மூலமாகவே தற்போது நடைபெற்று வருகிற ஒருசில தேசிய அளவிலான தேர்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, நடத்தப்பட்டு வருகின்றன.மாணவர்களின் மதிப்பெண் அல்லது சதவீதம் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டு வெளிப்படையான மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது. இனி வரும் காலங்களில், மாணவர்களுக்கான அத்தனை விதமான பட்டப்படிப்பு தேர்வுகளும் (UG Course Exams), பட்ட மேற்படிப்பு தேர்வுகளும் (PG Course Exams), NTA-தேசிய தேர்வு முகமை வாயிலாகவே நடத்தப்படும் என்றே தெரிகிறது.
இத்தகைய மாற்றங்கள் மத்திய அரசின் உயர்கல்வித்துறையில் நடைபெற்று வருகின்ற தருணத்தில், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகள் பற்றிய போதிய விழிப்புணர்வு தமிழகத்தில் இல்லை என்பதே நிதர்சனம்.
தமிழகத்தை பொறுத்தவரை, ஜே.இ.இ.(JEE-Joint Entrance Examination) எனப்படும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, நீட் (NEET-National Eligibility cum Entrance Test) எனப்படும் மருத்துவம், பல் மருத்துவம், இந்திய முறை மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு பற்றிய தகவல்கள் பலரும் அறிந்து தெரிந்து வைத்துள்ளனர். ஆனால், இந்த படிப்புகளைத் தவிர, மேலும் பலவித படிப்புகளுக்கு 30-க்கும் மேற்பட்ட தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகள் மத்திய அரசால் நடத்தப்படுகின்றன.
இத்தகைய தேர்வுகளில் பங்குபெறும் தமிழக மாணவ மாணவியரின் எண்ணிக்கை என்பது வெகு குறைவாகவே உள்ளதை புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடிகிறது.
உலகமே கையடக்க கைபேசியில் சுருங்கிவிட்ட இந்த நவநாகரீக காலக்கட்டத்திலும் பெரும்பாலான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் பற்றிய விபரங்கள் அறியாதவர்களாகவே மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். இதற்கான பிரத்தியேக விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழக மாணவர்களுக்கு பல்வேறு நுழைவுத்தேர்வுகளை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரவேண்டியது நமது தார்மீக கடமை மட்டுமல்ல பொறுப்பும் கூட.
– விழிப்புணர்வூட்டுவோம்…..
