பிரம்ம முகூர்த்தம். சூரிய உதயத்துக்கு முன்பாக இரவின் கடைசி கால்வாசி பகுதி தான் பிரம்ம முகூர்த்தம். ஏன் இந்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் தெரிந்துகொள்வோம்.
பிரம்ம முகூர்த்தம் என்பது சூரியன் உதிப்பதற்கு முன்பு இரவின் இறுதி நேரத்தின் போது அதாவது அதிகாலை 3.30 மணியிலிருந்து 5.30 மணி வரை இருக்கும்.
பிரம்ம முகூர்த்த பூஜை
நமது சாஸ்திரங்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழ வேண்டும் என்று சொல்கின்றன. ரிக் வேதத்தில் உஷத் தேவதை தோன்றி பின் சூரியன் உதயமாவதாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் உஷத் காலம் என்றழைக்கப்படுகிறது. இந்த வேளையில் குளித்துவிட்டு பூஜை செய்வது விசேஷமானது ஆகும்.
இந்த நேரத்தில் எழுந்திருப்பதும் கண்களை மூடி அமர்ந்திருப்பதும் விசேஷமானது. இந்த நேரத்தில் இஷ்ட தெய்வத்தையும் நமது முன்னோர்களையும் வணங்குவதன் மூலம் மும்மடங்கு பலன்களை பெறமுடியுமாம்.
இறைவனையும் இஷ்டதெய்வத்தையும், முன்னோர்களையும் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட ஸ்தலம், குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள், குறிப்பிட்ட ஓரை குறிப்பிட்ட நாட்கள் என்று இருந்தாலும் கூட அந்த நேரத்தில் செய்யும் பூஜையும். வழிபாடும் பன்மடங்கு நன்மை செய்யும் என்பது ஐதிகம். அதிலும் அந்த நேரத்தில் செய்யும் மந்திரங்களும் ஜபங்களும் வீரியமும் வலிமையும் மிக்கவை. இந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கும் கோரிக்கையும் நிச்சயம் நிறைவேறுமாம்.
பிரம்ம முகூர்த்தத்தில் காலையில் எழுந்து குளிப்பதும் பூஜை செய்வதும் வயதானவர்களுக்கு சிரமமாக இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் பல் துலக்கி , உடல் சுத்தம் செய்து நெற்றியில் விபூதி தடவி மந்திரங்கள் சொன்னால் போதும். தேக ஆரோக்கியம் கூடும். மனதில் குழப்பங்கள் அகலும். நாள் முழுவதும் நம்பிக்கையுடன் வளைய வருவீர்கள். முன்னோர்கள் மனம் குளிர்ந்து வீட்டில் வசிப்பார்கள். குல தெய்வமும், இஷ்ட தெய்வங்களும் முன்னோர்களின் ஆசியும் குறைவில்லாமல் கிடைக்கும்.
பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் அறிவியல் என்ன சொல்கிறது?
உடல் ஆரோக்கியத்துக்கு 24 மணி நேரமும் சீராக செயல்பட மெலட்டோனின் ஹார்மோன் தான் உதவுகிறது. இது அதிகாலை சூரிய ஒளி படும்போதும் இரவு முன்கூட்டியே தூங்கும் போதும் உடலில் சுரக்கிறது. நம் உடலில் சுரக்கும் இந்த திரவம் மூளைக்கும். இதயத்துக்கு, தண்டுவடத்துக்கும், சிறுநீரகத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்கிறது. இது மூளையின் நடுப்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியை இயங்க செய்கிறது. இந்த சுரப்பியில் இருந்து தான் மெலட்டோனின் சுரக்கிறது. அதிகாலை எழுவதும் உடற்பயிற்சி செய்வதும் நம் உடலுக்கு வைட்டமின் டி குறைபாட்டை உண்டு செய்யாது. இப்படி அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றாக்கி வாழ்ந்தால் நோயின்றி வாழலாம்.






